08 December 2010

முன்குறிப்பு: தமிழ் சினிமாக்களையே மிஞ்சும் அளவுக்கு இந்தக் கட்டுரையில்
ஏகப்பட்ட 'மெசேஜ்'கள் இருக்கின்றன!
பீர்பால் கதைகள் தெரியும்தானே? பீர்பால் கதைகளில் மதியூகம்,
விவேகத்துடன், அனு தினம் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளைச் சமாளிக்கவல்ல
வியூகங்களும் இருக்கின்றன. அதை அருமையாக உணர்த்துகிறது 'Solve Your
Problems - The Birbal Way' புத்தகம். ஒரு கதை சொல்லி, அதன் பிரச்னை
சொல்லி, அதை பீர்பால் தீர்க்கும் விதம் சொல்லி, அதில் இருந்து நமக்கான
பாடம் சொல்லி... அடித்து இருக்கிறார்கள் ஆசிரியர்கள் அனிதாமற்றும் லூயிஸ்
வாஸ்.
முட்டாள்களின் பட்டியல்!
கதை: ஒரு முறை அக்பரின் அரண்மனைக்குச் சில உயர் ரக அரபுக் குதிரைகளோடு
வந்தான் வியாபாரி ஒருவன். குதிரைகளின் கம்பீரத்தில் மயங்கிய அக்பர்,
அத்தனை குதிரைகளையும் வாங்கிக்கொண்டார். அதோடு, சில லட்ச ரூபாய்களை
முன்பணமாகக் கொடுத்து, மேலும் பல குதிரைகளைக் கொண்டுவருமாறு பணித்தார்.
'அப்படியே ஆகட்டும் பேரரசே!' என்று பணத்தோடு அவன் கிளம்பிச் சென்றான்.
சில நாட்கள் கழித்து, அக்பர் பீர்பாலிடம் நாட்டில் உள்ள முட்டாள்களின்
பட்டியலைத் தயாரிக்கச் சொன்னார். (அவ்வப் போது பீர்பாலிடம் இப்படிக்
கோக்குமாக்கு சவால்கள்விடுவது அக்பர் வழக்கம்!) பீர்பால் ஒரு பட்டியலைத்
தயாரித்து நீட்டினார். அதில் முதல்  பெயர் - அக்பர்! 'நாட்டின்பேரரசனை
முதல் முட்டாளாகக் குறிப்பிடுவதுதான் உன் மதியூகமா?' என்று சினத்தில்
சிடுசிடுத்தார் அக்பர்.
பீர்பாலின் தீர்வு: பொறுமையாகப் பதில் அளித்தார் பீர்பால். ''எந்த
உத்தரவாதமும் இல்லாமல், முன் பின் தெரியாதவனிடம் சில லட்ச ரூபாய்களைத்
தூக்கிக் கொடுத்த செய்கைதான் உங்களுக்கு அந்த அந்தஸ்தைப் பெற்றுத்
தந்தது!''
''ஒருவேளை அந்த வியாபாரி குதிரைகளோடு திரும்பி வந்துவிட்டால்?'' என்று
கேட்டார் அக்பர். ''அப்போது உங்கள் பெயரை நீக்கிவிட்டு, அவன் பெயரை அங்கு
சேர்ப்பேன்!'' என்றார் பீர்பால். ஒரு கணம் யோசித்த அக்பர், தனது தவற்றை
உணர்ந்து அமைதியாகிவிட்டார்.
மெசேஜ்-1: எவருடைய முக தாட்சண்யத்துக்காகவும் அதீத சலுகை வழங்காதீர்கள்.
பிறகு, வருந்துவது நீங்களாகத்தான் இருக்கும். எவர் மீது எப்போது
நம்பிக்கை வைப்பது என்பது சூழ்நிலையைப் பொறுத்தது என்றாலும், அந்தச்
சூழல் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
மெசேஜ்-2: உங்களுக்குக் கீழ் உள்ளவர்கள் உங்கள் தவற்றைச்
சுட்டிக்காட்டினாலும், கோபப்படாமல் அந்த தவறில் இருந்து நீங்கள்
புரிந்துகொள்ள வேண்டிய பாடத்தை உணருங்கள்!
நியாயமா... நாணயமா?
கதை: அக்பர் ஒருநாள், ''பீர்பால் உங்களுக்கு நியாயம் வேண்டுமா அல்லது
தங்க நாணயம் வேண்டுமா என்று கேட்டால், நீங்கள் எதைத்
தேர்ந்தெடுப்பீர்கள்?'' என்று கேட்டார், . (இந்த அக்பருக்கு வேறு வேலை
வெட்டியே இல்லைபோலும்!) ''இதில் என்ன சந்தேகம். தங்க நாணயம்தான்
பேரரசே!'' என்றார் பீர்பால் சட்டென. பீர்பாலிடம் அந்தப் பதிலை
எதிர்பார்க்காத அவையோர் அதிர்ச்சியில் சிலையாக, அக்பருக்கோ இதயமே ஒரு
நொடி நின்று துடித்தது. ''கடைக்கோடி சேவகன் இந்தப் பதிலைச் சொல்லி
இருந்தால், நான் ஆச்சர்யம் அடைய மாட்டேன். புத்திமான், நேர்மையாளன் என்று
நான் முழுமுதல் நம்பிக்கை வைத்திருக்கும் நீங்கள் இப்படிப் பதில்
சொல்வீர் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை!'' என்று அங்கலாய்த்தார்
அக்பர்.
பீர்பாலின் தீர்வு: ''ஒருவரிடம் எது இல்லையோ, அதைக் கேட்டுப் பெறுவது
மனித இயல்பு பேரரசே!'' என்று அமைதியாகப் பதிலளித்த பீர்பால் மேலும்
தொடர்ந்தார், ''உங்கள் ஆட்சியில் நமது தேசம் முழுக்க, அமைதி, நீதி,
நியாயம் ஆகியவை நிலைகுலையாமல் சீரும் சிறப்புமாகச் செழித்து இருக்கிறது.
ஏற்கெனவே போதுமான நீதி, நியாயம் நிலவும் சூழலில், என்னிடம் இல்லாத தங்க
நாணயத்தைக் கேட்டுப் பெறுவதுதானே இயல்பான மனிதனின் செயலாக இருக்கும்!''
ஒரே நொடியில் அங்கலாய்ப்புச் சுழலில் இருந்து விட்டு விடுதலையாகி,
பூரிப்புக் கடலில் திளைத்த அக்பர் அகமகிழ்ந்து, பீர்பாலுக்கு ஆயிரம் தங்க
நாணயங்களைப் பரிசளித்தார். (அட்றாசக்கை.. அட்றா சக்கை!)
மெசேஜ்-1: மேலதிகாரியையோ, வீட்டுப் பெரியவர்களையோ நியாயமாக 'நைஸ்'
செய்யும் வாய்ப்பு கிடைக்கும்போது, அதைத் தவறவிடவே கூடாது. உள்ளபடியே
உங்கள் சீனியரிடம் பளிச்சிடும் திறமைகளை நீங்கள் பாராட்டினால், நீங்களே
எதிர்பாராத சமயம் ஒன்றில் அது உங்களுக் குத் துணை நிற்கும்.
மெசேஜ்-2: எவரையும் கடிந்துகொள்வதற்கு முன், அவரது செயலின் நோக்கத்தைக்
கணிக்கப் பாருங்கள். ஒருவேளை, நீங்கள் அறியாத ஏதேனும் ஒரு காரணத்துக்காக
அவர் அப்படி நடந்துகொண்டு இருக்கலாம்.
கோழியா... முட்டையா?
கதை: அன்றைய அலுவல்கள் முடிந்து அரசவை கலையும் வேளையில் வந்தார் அந்தப்
பண்டிதர். அறிவார்ந்த மனிதர் என்பதால், அவரைத் தவிர்க்க முடியாமல்
வணங்கினார் அக்பர். ''உமது அமைச்சர்களுக்கு ஒரு சவால் விடுக்க
விரும்புகிறேன். நான் கேட்கும் ஒரே ஒரு கஷ்டமான கேள்விக்குப் பதில்
அளிக்க வேண்டும். அல்லது நூறு எளிமையான கேள்விகளுக்குப் பதில் அளிக்க
வேண்டும். உமது அமைச்சர்கள் தயாரா?'' என்று எகத்தாளமாகக் கேட்டார்
பண்டிதர். அக்பர் பீர்பாலை நோக்க... அவர் பண்டிதர் முன் வணங்கி நின்றார்.
''உங்களது அந்த ஒரே ஒரு கஷ்டமான கேள்விக்குப் பதில் அளிக்க நான் சித்தமாக
இருக்கிறேன்!'' என்றார் பீர்பால்.
பீர்பாலின் தீர்வு: உதடு பிரியாமல் புன்னகைத்த பண்டிதர், ''கோழி முதலில்
வந்ததா... முட்டை முதலில் வந்ததா?'' என்று கேட்டார். ஒரு கணம் கூட
யோசிக்காமல், ''கோழிதான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை!'' என்று பதில்
அளித்தார் பீர்பால். அந்த மின்னல் வேகப் பதிலில் திகைத்த பண்டிதர், ''அது
எப்படி? முட்டை ஏன் முதலில் வந்திருக்கக் கூடாது?'' என்று கேட்டார்.
''இந்த இரண்டாவது, மூன்றாவது கேள்விகள் என்னை ஆச்சர்யப்படுத்துகின்றன.
பண்டிதரின் ஒரே ஒரு கடினமான கேள்விக்கு நான் பதில் அளித்து விட்டேன்
என்பதை நான் நினைவூட்டத் தேவை இல்லை!'' என்றார் பீர்பால் அடக்கமாக!
மெசேஜ்: நீங்கள் ஒருவருக்குப் பொறிவைக்க நினைத்தால், அவர் தப்பிப்பதற்கான
அனைத்து வழிகளையும் அடைத்துவிடுங்கள்!

Thanks Ananda Vikatan.

13 June 2010

பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி (thatstamil.com)


பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி

Azim Premji


வாஷிங்டன்: பெற்றோரின் செல்வம் பிள்ளைகளுக்கே போய்ச் சேர வேண்டும் என்பது ஆசிய நாடுகளில் பாரம்பரிய வழக்கமாக உள்ளது. ஆனால் அது சமூகத்தின் பயன்பாட்டுக்கே போகவேண்டும்... பிள்ளைகளுக்கு கொஞ்சம் கொடுத்தால் போதும் என்கிறார் பிரபல ஐடி தொழிலதிபர் அஜீம் பிரேம்ஜி.

இந்திய ஐடி துறையில் ஜாம்பவான் நிறுவனங்களுள் ஒன்றான விப்ரோவின் நிறுவனர், தலைவர் அஜீம் பிரேம்ஜி. வர்த்தகத்துடன் நில்லாமல் பல சமூக நோக்குத் திட்டங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அஜீம் பிரேம்ஜி பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை சார்பில் இந்தியாவின் 600 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி மைய ஆசிரியர்களுக்கு ஸ்பெஷல் ட்ரெயினிங் அளிக்கும் உலகத் தரமான பல்கலைக் கழகம் ஒன்றினை உருவாக்கி வருகிறார், பிரேம்ஜி.

இந்தியப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்தும் முயற்சியாக, இதனை மேற்கொண்டுள்ளார் அவர். 10 வயதாகும் மாணவர்களால், சொந்த தாய்மொழியில் சுயமாக எழுத முடியாத அளவுக்கு இந்திய அடிப்படைக் கல்வி மோசமாக உள்ளது. இந்த நிலையை மாற்றவே கிட்டத்தட்ட ரூ 450 கோடி செலவு பிடிக்கும் இந்தப் பணியை அஜீம் பிரேம்ஜி மேற்கொண்டுள்ளார்.

அஜீம் பிரேம்ஜியின் இந்த அரிய பணியினை முன்னிலைப்படுத்தி அமெரிக்கா, பிரிட்டன் மீடியாக்கள் கட்டுரை வெளியிட்டு வருகின்றன.

இந்தியாவின் பில் கேட்ஸ் என்றால் அது அஜீம் பிரேம்ஜிதான் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை பாராட்டியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எப்படி, தனது வருவாயின் ஒரு பகுதியை தொடர்ந்து சமூக நலப் பணிகள், மருத்துவ சேவைகள் போன்றவற்றுக்கு செலவிட்டு வருவதைப் போலவே, பிரேம்ஜியும் செய்து வருவதாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பத்திரிகையில் அஜீம் பிரேம்ஜியின் பேட்டி ஒன்று இடம் பெற்றுள்ளது.

அதில், தனது சொத்துக்களில் பெரும் பகுதியை இதுபோன்ற பணிகளுக்காகவே தந்துவிடப் போவதாகவும், தனது வாரிசுகளுக்கு ஒரு சிறு பகுதியைக் கொடுத்தாலே போதும் என்றும் பிரேம்ஜி குறிப்பிட்டுள்ளார்.

"என் காலத்திலேயே எனது சொத்துக்களின் பெரும் பகுதியை சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காகக் கொடுத்து விடப்போகிறேன். என்னுடைய சொத்துக்களின் ஒரு சிறு பகுதியை மட்டும் என் குழந்தைகளுக்குக் கொடுத்தால் போதும். பல தலைமுறைகளுக்கு அதுவே அவர்களுக்குத் திருப்தியாக இருக்கும்...

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில், பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற பரம்பரை வழக்கம் உள்ளது. என்னைப் பொறுத்தவரை, பெற்றோரின் பெரும்பகுதி சொத்துக்கள் சமூகத்துக்கே சேர வேண்டும்.

உனக்கு யார் அதிகம் கொடுத்தார்களோ, அவர்களுக்கு அதைவிட அதிகமாகத் திருப்பிக் கொடு என்பதுதான் வாழ்க்கையில் எனக்குப் பிடித்த தத்துவம்... " என்கிறார் பிரேம்ஜி.

உங்களது பெரும் சொத்துக்களில், பவுண்டேஷனுக்காக எவ்வளவு தரப்போகிறீர்கள்? என்ற கேள்விக்கு அஜீம் பிரேம்ஜி தந்துள்ள பதில்:

"சிலர் நான் ரூ 450 கோடி தருவதாகக் குறிப்பிட்டுள்ளனர். அது உண்மையில்லை. அதைவிட அதிகமாகவே அறக்கட்டளைக்கும் சமூகப் பணிகளுக்கும் தரப் போகிறேன். என் சொத்து பிள்ளைகளுக்கல்ல.. சமூகத்துக்கு" என்கிறார்.

தனது சமூகப் பணிகளை சரியாக நிறைவேற்ற, விப்ரோ இன்ப்ராஸ்ட்ரக்சர் எஞ்ஜினீயரிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அனுராக் பிகாரியை, விப்ரோ பவுண்டேஷனுக்கு மாற்றியுள்ளார். பிரேம்ஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் இந்த அனுராக்.

17 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 28வது பணக்காரராக இருக்கும் அஜீம் பிரேம்ஜிதான், ஆசிய அளவில் இந்த அளவு நற்பணிகளைச் செய்து வரும் ஒரே தொழிலதிபர் என ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் தனிப்பட்ட தனது வாழ்க்கையில் மிகுந்த எளிமையையும் சிக்கனத்தையுவம் கடைப்பிடிப்பவராகத் திகழ்கிறார் பிரேம்ஜி. இதுபற்றி சான் பிரான்ஸிஸ்கோ க்ரானிக்கிள் பத்திரிகை குறிப்பிடுகையில், "பெரும் கோடீஸ்வரரான அஜீம் பிரேம்ஜி நிஜத்தில் மிக மிக எளிய வாழ்க்கையையே வாழ்கிறார்..." என்கிறது.

"இன்றும் தனது பழைய ஃபோர்டு காரையே பயன்படுத்தும் பிரேம்ஜி, சமயத்தில் விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு ஆட்டோவில் போகவும் தயங்குவதில்லை. அவரது மனைவி இன்னும் ஒரு பழைய பியட் காரைத்தான் ஓட்டுகிறார். தனது நிறுவன கேண்டீன்களில் உணவு வீணாவதைக் கூட அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. தேவையின்றி விளக்குகள் எரிவதைக் கண்டால் மிகக் கோபமடைவார். நேரம் இருந்தால் தனது துணிகளை தானே சலவை செய்து கொள்கிறார்..."

-இவையெல்லாம் பல்வேறு தருணங்களில் பிரேம்ஜியைப் பற்றி மீடியாவில் வெளிவந்த செய்திகள்.

"ஆனால் அவரது இவையெல்லாம் வெட்கப்பட வேண்டிய விஷயங்களல்ல.. பெருமை கொள்ள வேண்டியவை. இந்த சமூகத்தின் மீது ஒரு பெரும் தொழிலதிபர் கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடுகள். இன்னொரு பக்கம் அவர் தனது பெரும் சொத்துக்களையே, சமூக மாற்றத்துக்காக செலவழிக்கிறார் என்ற உண்மை, அவரைப் பற்றி அனைத்து மதிப்பீடுகளையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது" என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை.


Regards
Thiruppathi




--














Best Regards,

Sivabalan A